2.5 மில்லியன் டொலர் இணைய மோசடி விவகாரம் – நிதியமைச்சு அதிகாரி மர்ம மரணம்.!!!
அரசாங்கத்தின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணையவழியில் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அதிகாரி, அரசாங்கத்தின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இணையவழியில் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் அடிப்படையில் முன்னதாகவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேக்கர்களினால் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக “அத தெரண” செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியிடப்படவில்லை.
இவ்வுயிரிழப்புக்கான காரணங்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.