2025 சாதாரண தரப் பரீட்சை: 11,790 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தி பெற்று சாதனை.!!!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இம்முறை அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11,790 ஆக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, இவ்வாண்டு விஞ்ஞானப் பாடத்தில் 70.1 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு அது 69.07 சதவீதமாக இருந்தது. அதேவேளை, கணிதப் பாடத்தில் இம்முறை 72.03 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த ஆண்டு அந்த வீதம் 71.06 சதவீதமாக பதிவாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், முக்கிய பாடங்களில் மாணவர்களின் சித்தி வீதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.