மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட – 22 இளைஞர்கள் கைது.!!!
மாலபே பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் 22 இளைஞர்கள் கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலபே, சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு அருகில் இளைஞர் குழுவொன்று கவனயீனமாக மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, கடுவலை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் இந்த சாகச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ‘வட்ஸ்எப்’ குழுவொன்றின் மூலம் ஒருங்கிணைந்து குறித்த இடத்திற்கு வந்திருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பொலிஸார் பொறுப்பில் எடுத்துக்கொண்ட மோட்டார் சைக்கிள்களில் இலங்கையில் பதிவு செய்யப்படாத இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 22 இளைஞர்களும் கடுவலைப் பகுதிக்கு வெளியே வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் எதிர்வரும் 05ஆம் திகதி கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.