ஆழ்கடலில் படகிலிருந்து தவறி விழுந்த 23 வயது இளம் மீனவர் மாயம்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
மஹவெவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் மீனவர் ஒருவர் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்து மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் மாயமானவர் மஹவெவ – இஹல மஹவெவ பகுதியைச் சேர்ந்த மஹாமாலிகே மனோஜ் தினுவந்த சிசிர (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி வென்னப்புவ – வெல்மங்கரைய மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மேலும் ஆறு மீனவர்களுடன் “சஞ்சன புதா 13” எனும் பலநாள் மீன்பிடிப் படகில் சர்வதேச கடற்பரப்பை நோக்கி மீன்பிடித் தொழிலுக்காக அவர் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
மே 30ஆம் திகதி காலை, குறித்த படகின் அவசர ஆபத்து எச்சரிக்கை சமிக்ஞை தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சிலிருந்து படகின் உரிமையாளருக்கு அவசர தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, மாரவில – தல்வில வீதியில் வசிக்கும் படகின் உரிமையாளரான வர்ணகுலசூரிய பிரபாத் சஞ்சீவ ஜான்ஸ், கடற்றொழில் திணைக்களத்தின் வானொலித் தொடர்பு மையம் ஊடாக படகுடன் தொடர்புகொண்டுள்ளார்.
அப்போது படகின் ஓட்டுநர் துசித பெர்னாண்டோ வழங்கிய தகவலின்படி, கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில் சுரேஷ் மற்றும் தினுவந்த ஆகிய இரு மீனவர்களும் எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்துள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் சுரேஷ் என்பவர் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும், தினுவந்த கடலலைகளில் சிக்குண்டு மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த வேளையில் குறித்த மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு 37 நாட்கள் ஆகியிருந்ததாக படகின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மாயமான தினுவந்தவின் உடல் இதுவரை மீட்கப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் மஹவெவ பிரதேச மக்களிடையே பெரும் கவலையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.