டெங்கு ஒழிப்புக்காக 3 நாள் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம் – 12 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு.!!!
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்று நாட்கள் கொண்ட விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இன்று (08), நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) ஆகிய நாட்களில் நாடளாவிய ரீதியில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
12 மாவட்டங்களைச் சேர்ந்த 72 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகங்களை மையமாகக் கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. டெங்கு நோய் பரவல் அதிகம் பதிவாகும் பகுதிகளில் விசேட கண்காணிப்புகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு பெருகும் இடங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் அண்மைய தரவுகளின்படி, கடந்த ஜூன் 5 ஆம் திகதி வரை நாட்டில் 36,168 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
பதிவான நோயாளர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மாத்தறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவரை நாடு முழுவதும் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களில் மூவர் சிறுவர்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவலைத் தடுப்பதற்காக வீடுகள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் நீர் தேங்கும் இடங்களை அகற்றி, சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகப் பேணுமாறு பொதுமக்களிடம் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.