சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 39 பேர் கைது; டிங்கிகள், கெனோ மற்றும் டிராக்டர்களும் பறிமுதல்.!!!
-கற்பிட்டி எம்.ஹெச்.எம். சியாஜ்-
உள்ளூர் கடற்பரப்பில் கடந்த ஜூன் 01 முதல் 15 ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 39 பேர் கைது செய்யப்பட்டதுடன், 12 டிங்கிகள், ஒரு கெனோ மற்றும் இரண்டு டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருகோணமலை கிண்ணியா, துடுவ, சாகரபுரம், வைட் டோப் ரோக், கொக்கட்டியாறு, தக்வா நகர், முல்லைத்தீவு நந்திக்கடல், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் கட்டைக்காடு மற்றும் அம்பாறை காரைத்தீவு உள்ளிட்ட கரையோர மற்றும் கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் குறித்த சந்தேகநபர்கள் கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைகளின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களுடன் வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, குச்சவெளி, மூதூர், முல்லைத்தீவு, கொட்பே, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் காரைத்தீவு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






