போலி 600,000 அமெரிக்க டொலர்களுடன் 5 பேர் கைது: ரூ.19 கோடி பெறுமதியான கள்ள நோட்டுகளும் பறிமுதல்.!!!
போலி அமெரிக்க டொலர்களை தமது வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய இரு வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 600,000 போலி அமெரிக்க டொலர் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வெல்லம்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையின் போது சுமார் 19 கோடி ரூபாய் பெறுமதியான போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த பெண், கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

