வீசா விதிமுறைகள் மீறல் – நிதி மோசடி சந்தேகத்தில் 74 வெளிநாட்டினர் கைது.!!!
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் வீசா விதிமுறைகளை மீறி நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 74 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை (06) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கை, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உத்தரானந்த மாவத்தையில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தொகுதியை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் 41 ஆண்களும் 33 பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் 19 முதல் 39 வயதுக்குட்பட்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தமை மற்றும் மோசடியான நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.