புகையிரத ஊழியர்களுக்கு சமூக ஊடக கட்டுப்பாடு; புதிய சுற்றறிக்கை வெளியீடு.!!!
கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும், புகையிரத நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்து, இலங்கை புகையிரதத் திணைக்களம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புகையிரதத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கடமை நேரங்களிலும் கடமை தொடர்பான சந்தர்ப்பங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடும் போக்கு அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதன் மூலம், புகையிரத சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் ஒழுக்கம் ஆகியவை பாரிய ஆபத்துக்கு உள்ளாகக்கூடும் என சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், புகையிரதத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அதிகாரம் புகையிரத பொது முகாமையாளர், உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி செயல்படும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், புகையிரத பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.