மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் வழக்கு: நால்வர் மீண்டும் விளக்கமறியல் – நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் பிணையில் விடுதலை.!!!
– கிருஷ்ணகுமார் –
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நால்வரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு நகைக்கடை உரிமையாளர்களை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (16) நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ. தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டதுடன், ஏனைய நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஆணையிட்டார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி, கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு கொத்தியாபுலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், காணாமல் போயிருந்த மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மேலும், அந்த இளம் தாயின் 3 வயதுடைய சிறுமி கொத்தியாபுலை வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், வவுணதீவு காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய தம்பி மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கியதாகக் கூறப்படும் ஊறணி மற்றும் திருகோணமலை வீதி பகுதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், மயக்க மருந்துகளை பெற்றுக்கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மருந்துகளை விநியோகித்த நபர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் மயக்க மருந்துகளை பெற்றுக்கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.