பயணப்பொதிக்குள் மறைக்கப்பட்ட சடலம் மீட்பு: பராமரிப்பு தொழிலாளி கைது.!!!
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கலங்கமுவ, பியசமர பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் பயணப்பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (20) சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வீட்டின் அறையொன்றில் இருந்த பயணப்பொதிக்குள் மூதாட்டியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர், முக்கலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, வீட்டின் பராமரிப்பு பணிக்காக வந்திருந்த 42 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர் என தெரியவந்துள்ளதுடன், மூதாட்டியிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலைக்குப் பின்னர் சடலத்தை மறைக்கும் நோக்கில் பயணப்பொதிக்குள் வைத்து மறைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா மற்றும் அரசாங்க சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து நீதவான் விசாரணைகள் மற்றும் ஆரம்பக்கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.