மட்டக்களப்பு பிரபல பாடசாலையில் மாணவன் மீது கொடூர தாக்குதல்: ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு.!!!
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தரம் 10 மாணவன் ஒருவர், அதே பாடசாலையைச் சேர்ந்த இரு ஆசிரியர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலையில் இடம்பெற்ற சிறிய வகுப்பறை தொடர்பான விவகாரத்தைத் தொடர்ந்து குறித்த மாணவன் மீது ஆசிரியர்கள் வன்முறையாக தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், சம்பவத்தை வெளியே தெரிவித்தால் மாணவனை கொலை செய்து விடுவேன் என ஆசிரியர் ஒருவர் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த தாக்குதலால் காயமடைந்த மாணவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து மாணவனின் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பாடசாலைகளில் உடல் தண்டனை வழங்குவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களால் மாணவர் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இச்சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகளும் பொலிஸாரும் உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“கல்வி வழங்க வேண்டியவர்கள் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறுவது மிகவும் கவலைக்குரியது” என மாணவனின் உறவினர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.

