‘பிரஜா சக்தி’ திட்டத்தை வலுப்படுத்த கனேடிய உயர்ஸ்தானிகர் இணக்கம்.!!!
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை பாராட்டிய கனேடிய உயர்ஸ்தானிகர், வறுமை ஒழிப்பு, கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு கனடாவின் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தினால் கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத் தரத்தையும் சமூகப் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான விசேட உத்திகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துவதிலும், இலங்கையின் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், வறிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் கனடா தயாராக இருப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.



