இன நல்லிணக்கத்தை பாதித்த கருத்து வழக்கு: ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்த மேல் நீதிமன்றம்.!!!
பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 09 மாத சாதாரண சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது.
இந்த முக்கிய தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன வழங்கியதுடன், தன்னை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் கருத்து வெளியிட்டதாக ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், கடந்த 2025 ஜனவரி 09 ஆம் திகதி ஞானசார தேரரை குற்றவாளியாக அறிவித்து, 09 மாத சாதாரண சிறைத்தண்டனையும் 1,500 ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். எனினும், இன்று மேல் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்த தண்டனையை ஏற்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், ஞானசார தேரருக்கு எதிராக முன்னர் வழங்கப்பட்டிருந்த 09 மாத சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தீர்ப்பு நடைமுறையில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.