காரில் மாடுகளை கடத்திய கும்பல்; கார் மற்றும் மாடுகள் மீட்பு – இருவர் தப்பியோட்டம்.!!!
சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி, காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காக சம்மாந்துறை பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று (10) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதில் கடத்தப்பட்ட மாடுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
எனினும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவர் பொலிஸாரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரினதும் அடையாளங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அவர்களை விரைவில் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரைக்கு அமைவாகவும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலில், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
