அதிவேக வீதிப் பாதுகாப்பு நடைமுறையில் மாற்றம்; அரசின் புதிய அறிவிப்பு.!!!
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசன பட்டி (Seat Belt) பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை அரசாங்கம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2011ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கட்டளையின்படி, அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள பயணிகள் கட்டாயம் ஆசன பட்டி அணிய வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.
ஆசன பட்டி வசதி இல்லாத வாகனங்களில் அவற்றை மறுசீரமைத்து பொருத்துவதற்காக உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆரம்ப சலுகைக் காலம் 2026 ஜூன் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.
இதனையடுத்து, சலுகைக் காலத்தை நீடிக்குமாறு வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த அரசாங்கம், 2026 ஜூன் 17ஆம் திகதியிட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த கட்டளையில் திருத்தம் செய்து, சலுகைக் காலத்தை 2026 செப்டம்பர் 19ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
இந்தத் திருத்தம் தொடர்பான முன்மொழிவு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.