கண்டியில் பரபரப்பு: சொகுசு காருக்குள் பெண்ணின் சடலம்; கணவர் கைது.!!!
மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டம், தெல்தெனிய – திகன, ரஜவெல்ல பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம மரணச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் பின்புற இருக்கையில் இருந்து 36 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் அக்குரணை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடந்த சில காலமாக திகன பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 17 ஆம் திகதி மாலை, வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் பின்புற இருக்கையில் சந்தேகத்திற்கிடமான நிலையில் பெண்ணின் சடலம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தெல்தெனிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த தெல்தெனிய பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் 41 வயதுடைய கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறே இந்த மர்ம மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பெண்ணின் மரணம் கொலையா அல்லது வேறு காரணத்தினாலா ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், சடலம் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
தெல்தெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.