செம்மணி புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் என்புக்கூடு மீட்பு; அகழ்வில் மேலும் முக்கிய தடயங்கள்.!!!
செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் போது, மழை அங்கியை ஒத்த ஆடையுடன் காணப்பட்ட சிறுவனின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், 41ஆவது நாளான நேற்று (23) மட்டும் மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 9 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று என்புக் குவியல்கள், சில ஆணிகள் மற்றும் ஒரு சீமெந்து தட்டும் அகழ்வின் போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை உள்ளடக்கி இதுவரை மொத்தம் 94 நாட்கள் அகழாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், 478 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 464 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மேலதிக ஆய்வுகள் மற்றும் தடயவியல் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




