முன்னாள் காதலியை குத்திக் கொன்ற சீன இளைஞன்: 14 நாட்களுக்குப் பின் கொழும்பில் கைது.!!!
கொழும்பில் தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்து, அவரது புதிய காதலரையும் படுகாயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சீன இளைஞன் 14 நாட்களுக்குப் பின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய சந்தேகநபர், கொழும்பு தர்மபால மாவத்தையில் ஒளிந்திருந்தபோது குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடமிருந்து 2200 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வந்த 29 வயதுடைய லியு யி ஹான் என்ற சீன மாணவியாகும். குறித்த மாணவி கொழும்பு துறைமுக நகரத்தில் பணியாற்றும் மற்றொரு சீன இளைஞருடன் பழகி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களுபோவில பீரிஸ் குடியிருப்பில் தங்கியிருந்த மாணவி, தனது பொருட்களை எடுத்துச் செல்ல புதிய காதலருடன் அங்கு சென்றிருந்தபோது, முன்னாள் காதலன் திடீரென ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மாணவி கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரை காப்பாற்ற முயன்ற புதிய காதலரும் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த சீன இளைஞர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்குப் பின்னர் தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி அண்மையில் அறிவிப்பொன்றையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.