கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.52.8 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்; 45 வயது பெண் கைது.!!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வர முயன்றதாகக் கூறப்படும் 45 வயதுடைய பெண் ஒருவர் இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை சுமார் 6.15 மணியளவில் Green Channel வழியாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது குறித்த பெண் சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடம் இருந்த நான்கு பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 176 கார்ட்டன் வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 35,200 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் ரூ.52.8 இலட்சம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளில், அவர் ஷார்ஜாவில் சிகரெட்டுகளை கொள்வனவு செய்து இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுங்க விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு ரூ.100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் தொடர்பான சுங்க விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சுங்கச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
