கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்; காலி இந்துருவ கடற்கரையில் கரையொதுங்கியது.!!!
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்ததாக அறிவிக்கப்பட்ட 17 வெற்று கொள்கலன்களில் ஒன்று இன்று (02) காலி மாவட்டத்தின் இந்துருவ, கைகாவல கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேற்று (01) வெளியிட்டிருந்த அறிவிப்பில், கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்கள் நிலவும் நீரோட்டத்தின் காரணமாக பேருவளை, நீர்கொழும்பு வழியாக புத்தளம் வரையிலான கடற்கரைப் பகுதிகளை நோக்கி மிதந்து வரக்கூடும் என எச்சரித்திருந்தது.
அந்த எச்சரிக்கைக்கு அமைவாக, இன்று காலை குறித்த கொள்கலன்களில் ஒன்று இந்துருவ கைகாவல கடற்கரையில் கரையொதுங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய கொள்கலன்களும் கடற்கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.


