பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி தாக்கம்; 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு.!!!
தற்போது நாட்டை பாதித்து வரும் கடும் மழை நிலைமை நாளை (04) நண்பகல் முதல் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே, இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஜப்பானுக்கு தெற்கே பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஒரு சூறாவளி உருவாகி வருவதாகவும், அதன் தாக்கத்தால் எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பிறகு மழை நிலைமை மீண்டும் தீவிரமடையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
இதனால், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யும் சாத்தியம் இருப்பதுடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், அதேபோல் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 6ஆம் திகதிக்குப் பின்னர் காற்றின் வேகமும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தொடர்ச்சியான வானிலை அறிவிப்புகளை அவதானித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.