கொழும்பிலிருந்து போதைப்பொருள் கடத்தல்; காத்தான்குடியில் மூவர் சிக்கினர்.!!!
காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உப பொலிஸ் பரிசோதகர் மதுசங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் கடந்த 09ஆம் திகதி இரவு சுமார் 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 100 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மற்றுமொருவரிடமிருந்து 110 கிராம் ஹெரோயினும், மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து 120 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி, மொத்தமாக 100 கிராம் ஐஸ் மற்றும் 230 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31, 32 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் கடந்த 10ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய சந்தேகநபர்கள் மூவரையும் மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.