மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கடத்தல்; சிறை அதிகாரி சிக்கினார்.!!!
பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர், கல்கிசை பொறுப்புக்குட்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிகாரியிடமிருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரும் முதற்கட்டமாக கல்கிசை பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதியொருவர், வாட்ஸ்அப் அழைப்பின் மூலம் போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய இடம் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய குறித்த இடத்திற்குச் சென்று போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்டதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.