உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கைது தடை உத்தரவு கோரி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு.!!!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு இன்று (18) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார். அதேவேளை, பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹார்ஷி ஹேரத் ஆஜராகி பதிலளிக்கவுள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இம்மனு தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.