20 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி; மிரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு.!!!
மிரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் இன்று (12) உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
நாட்டில் சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சைக்காக 5,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நோயாளிகளுக்கான சிகிச்சை சேவையை விரைவுபடுத்தும் நோக்கில் இம்மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயாளிகளுக்கான சிகிச்சை சேவையில் நீண்டகாலமாக நிலவிய சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, ‘தொற்றா நோய்கள் (NCD) தொடர்பான செயலணி’ முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி, கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த முக்கிய பணிகள் வெறும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டு, மிரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் இன்று மக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

