டீசல் விலை உயர்வு அச்சம்: தனியார் பேருந்து சேவைகள் 50% வரை குறையலாம்.!!!
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழ்நிலை மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50 சதவீதம் வரை குறைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நுகேகொடையில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன, நட்டத்துடன் பேருந்து சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது அதற்குப் பொறுப்பான அமைச்சரோ இதுவரை எந்தவித பதிலும் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இம்மாத இறுதியில் டீசல் விலை மீண்டும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டால் வருடாந்த கட்டண திருத்தத்தின் மூலம் பேருந்து கட்டணங்கள் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
தற்போது ஏற்கனவே சுமார் 25 சதவீத பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என்றும், சில பேருந்துகளில் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறான நடைமுறைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், சிலர் அதனை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேருந்து சேவைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் அவசியம் எனவும், இல்லையெனில் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.