மட்டக்களப்பு விடுதியில் தீப்பரவல் – இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.!!!
மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (27) பிற்பகல் அளவில் குறித்த விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து வெளியான நச்சுப் புகையினால் அறையில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் உள்ள வைத்தியசாலையில் குறித்த பிள்ளைகளின் தாயார் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் தாயை பார்வையிடுவதற்காக பதுளையிலிருந்து தந்தையுடன் இரு பிள்ளைகளும் மட்டக்களப்பிற்கு வந்துள்ளனர்.
இதன்போது, தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தைகள் விடுதி அறையில் தங்கியிருந்த நிலையில், திடீரென அந்த விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக அறையில் சிக்கிய 3 வயது ஆண் குழந்தையும், 5 வயது பெண் குழந்தையும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


