காத்தான்குடி பிரதான வீதியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் – கட்டுப்படுத்த தீவிர முயற்சி.!!!
—எம்.ரி.எம்.யூனுஸ்—
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இன்று (26) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து, கடுமையான முயற்சிகளின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்தினால் குறித்த வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட பொருட்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ பரவல் குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி நகரசபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், காத்தான்குடி பொலிஸார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீ பரவல் காரணமாக குறித்த பகுதியில் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியிலான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்த போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










