ரயிலுடன் மோதி வெளிநாட்டு பெண் பலி.!!!
அஹங்கம – கபலான பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் இன்று (19) இடம்பெற்ற துயரமான விபத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ரஷ்ய பெண் மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அஹங்கம – கபலான புகையிரத கடவையை கடக்க முயன்ற நிலையில் ரயிலுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துயர சம்பவத்தில் 23 வயதுடைய ரஷ்ய இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நேரத்தில், விபத்து இடம்பெற்ற வேளையில் புகையிரத கடவையின் சமிக்ஞை விளக்குகள் இயங்கிக் கொண்டிருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.