முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை.!!!
• ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றவியல் அலட்சியம் நிரூபணம்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கக் கிடைத்திருந்த முன்கூட்டிய உளவுத்துறை எச்சரிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) பூஜித ஜயசுந்தரவுக்கு, கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது.
மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணை அமர்வு 2-1 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் குற்றத்தீர்ப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நிலையில், நீதிபதி விராஜ் வீரசூரிய மாறுபட்ட கருத்தை வெளியிட்டார்.
சட்டமா அதிபரால் சுமத்தப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் பூஜித ஜயசுந்தர குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகத் துல்லியமான உளவுத்துறைத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், அவற்றைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை, தனது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றாதமை மற்றும் கடுமையான குற்றவியல் அலட்சியம் ஆகியவையே குற்றச்சாட்டுகளின் மையமாக இருந்தன.
இந்த வழக்கில் பூஜித ஜயசுந்தர ஆரம்பத்தில் 2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார். பின்னர் அந்தத் தீர்ப்பு சட்ட ரீதியாகப் பிழையானது என உச்ச நீதிமன்றம் அறிவித்து, அதனை ரத்து செய்து முழுமையான மறுவிசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.
இலங்கையின் 34ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய பூஜித ஜயசுந்தர, 2019 ஏப்ரல் மாத ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற காலத்தில் நாட்டின் பொலிஸ் துறைக்குத் தலைமை வகித்திருந்தார்.
தாக்குதல்களைத் தொடர்ந்து எழுந்த கடும் பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் அரசியல் அழுத்தத்தின் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
மேலும், குற்றவியல் வழக்குக்கு அப்பாற்பட்ட வகையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் ரூ.75 மில்லியன் இழப்பீட்டை தனது சொந்த நிதியிலிருந்து ஏற்கனவே செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.