தான் பணியாற்றிய அதே நீதிமன்றத்தால் முன்னாள் நீதவான் விளக்க மறியலில் – களுவாஞ்சிக்குடியில் அதிர்ச்சி சம்பவம்.!!!
களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் முன்பு நீதவானாக பணியாற்றிய ஒருவரை அதே நீதிமன்றம் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்ட அதிர்ச்சியான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சில காலங்களுக்கு முன்பு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் என்பவர் நீதவானாக கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் காலப்பகுதியில் நீதிமன்றத்தின் களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சில சான்றுப் பொருட்கள் காணாமல் போனமை பின்னர் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, நீதிமன்ற பதில் பதிவாளருடன் இணைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சில பொருட்களை முன்னாள் நீதவான் மோசடியாக கையாடியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன பொருட்களில் தங்க நகைகளும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய நீதிமன்ற பதில் பதிவாளர் கைது செய்யப்பட்டு முன்னதாகவே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முன்னாள் நீதவான் ரஞ்சித்குமார் பின்னர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு இடமாற்றப்பட்டதுடன், கடந்த ஜனவரி 02ஆம் திகதி அவர் தனது பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு இணைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்குடன் தொடர்புடைய வழக்கு நேற்று களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் நீதவான் ரஞ்சித்குமார் நகர்த்தல் பத்திர மனுவின் மூலம் நீதிமன்றில் ஆஜரானார்.
வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், முன்னாள் நீதவான் ரஞ்சித்குமாரை வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டது.
இதேவேளை, இவ்வழக்கில் விளக்க மறியல் உத்தரவை வழங்கிய களுவாஞ்சிக்குடி நீதவான் ரி. பிரதீபன், இந்த வழக்கிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக நீதிமன்றில் அறிவித்தார்.
மேலும், இவ்வழக்கை விசாரிக்க நீதிச்சேவை ஆணைக்குழு புதிய நீதவானை நியமித்த பின்னர், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதவான் ரஞ்சித்குமார் பிணை கோரி விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
தான் நீதவானாக பணியாற்றிய அதே நீதிமன்றத்திலிருந்து விளக்க மறியல் கைதியாக ஒருவர் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.