டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5 மில்லியன் பெறுமதியிலான புதிய வீடு; அடிக்கல் நாட்டி வைப்பு.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-
டித்வா புயலால் கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடொன்றை மீளக் கட்டும் நோக்கில், ரூ.5 மில்லியன் பெறுமதியிலான புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (17) கண்டக்குழி கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.
புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஜே.எம். பைசல் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கண்டக்குழி வட்டார கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் இபாம், நிசீக மற்றும் பிரஜா சக்தி சமூக மேம்பாட்டு சபை (CDC) தலைவர் மிளிந்த ஆகியோரின் ஒருங்கிணைப்பில் அடிக்கல் நாட்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்ஷினி, கண்டக்குழி கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். முஷாதீக், கற்பிட்டி பிரதேச செயலக அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராம மக்கள் மற்றும் புயலால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
டித்வா புயலால் வீடிழந்த குடும்பத்திற்கு பாதுகாப்பான புதிய வீடு அமைத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.





