பொலிஸார் போல நடித்து பணம் பறிப்பு மோசடி அதிகரிப்பு – பொதுமக்களுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவசர எச்சரிக்கை.!!!
நாட்டில் பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொலைபேசி அழைப்புகள் அல்லது இணைய வழித் தொடர்புகள் மூலம் சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை தொடர்புகொண்டு, “உங்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது” என மிரட்டி பணம் கேட்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகளில், குற்றவாளிகள் தங்களை பொலிஸ் அதிகாரிகள் அல்லது விசாரணை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி மக்களை அச்சுறுத்தி பணம் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான சைபர் மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் மாத்திரம் சைபர் குற்றச்செயல்கள் தொடர்பாக 10,015 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், அதில் சுமார் 3,100 முறைப்பாடுகள் இவ்வாறான சைபர் மோசடிகளுடன் நேரடியாக தொடர்புடையவையாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவரேனும் தொலைபேசி மூலம் தங்களை பொலிஸார் என அடையாளப்படுத்தி பணம் கோரினால், அதனை நம்பாமல் உடனடியாக உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.