உலக சந்தையில் விலை குறைந்தாலும் உடனடியாக எரிபொருள் விலையை குறைக்க முடியாது – பிரதமர் ஹரிணி அமரசூரிய.!!!
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், உடனடியாக உள்ளூர் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் விற்பனை செய்யப்படும் எரிபொருள், அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்டுள்ள சுமையின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“உண்மையான கணக்கீட்டின் அடிப்படையில் ஒரு லீற்றர் எரிபொருள் 700 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும், அரசாங்கம் வழங்கும் நிவாரணத்தின் காரணமாகவே மக்களுக்கு அது சுமார் 400 ரூபாய் விலையில் வழங்கப்பட்டு வருகிறது” என பிரதமர் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில், சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அத்துடன், மக்களின் வாழ்வாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.