தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!!!
நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை மத்திய நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சைக்கு 2,94,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இவர்களில் 2,20,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கான காலம் கடந்த 05ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதுடன், பரீட்சை நிறைவடையும் வரை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரங்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் மன ஒருமைப்பாட்டுடன் பரீட்சையை எதிர்கொள்ளும் வகையில், பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சை நேர அட்டவணை
🔹 இரண்டாம் வினாத்தாள்: காலை 9.30 முதல் 10.45 வரை
🔹 இடைவேளை: 10.45 முதல் 11.15 வரை
🔹 முதல் வினாத்தாள்: காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை
மாணவர்கள் வினாத்தாளில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனமாக வாசித்து, பரீட்சை இலக்கத்தைச் சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.