டெங்கு ஒழிப்பு சோதனையில் வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு; பெண் கைது. !!!
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பெலவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதுடன், அதன் உரிமையாளரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், இலங்கை இராணுவம், விமானப்படை, பொலிஸார் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நேற்று (22) இந்த விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்பட்டு, மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்டபோது, உயிருடன் காணப்பட்ட டெங்கு நுளம்புக் குடம்பிகளுடன் துப்பாக்கியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மீட்கப்பட்ட துப்பாக்கியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, மற்றுமொரு வீட்டில் உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டபோது, அங்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீட்டின் உரிமையாளர் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் வளாகங்களை பராமரித்த குற்றச்சாட்டின் கீழ், இந்த நடவடிக்கையின் போது அடையாளம் காணப்பட்ட 13 பேருக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அகற்றி, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.