பப்புவா நியூ கினியா நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்; இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய சந்திப்பு.!!!
• சுற்றுலா, முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பப்புவா நியூ கினியாவிற்கான தனிப்பட்ட விஜயத்தின் போது அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, பப்புவா நியூ கினியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் பெல்டன் நமஹ் (Belden Namah) அவர்களை சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஹிஸ்புல்லாஹ்வை வரவேற்ற அமைச்சர் பெல்டன் நமஹ், நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், இருநாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டார்.
இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத்துறை வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள், தொழில் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் பெல்டன் நமஹை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
பப்புவா நியூ கினியாவின் முன்னாள் பிரதமர் மெக்கோரே மொராட்டாவின் (Makere Morauta) துணைவியார் ரொஸ்லின் மொராட்டாவின் (Roslyn Morauta) ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பப்புவா நியூ கினியா Bismil Trading நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இக்ராம் சஹாப்டீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




