மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி 5 பேர் படுகாயம்.!!!
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து மற்றும் சிறிய ரக லொறி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து நடத்துனர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
ஆரையம்பதியில் இருந்து கதுருவெல நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிஸ்கட் ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியும், சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் பாதசாரிகள் கடவை அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பேருந்து நடத்துனர், பேருந்தில் பயணித்த சிலர் மற்றும் லொறியில் சென்றவர் உட்பட ஐந்து பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சித்தாண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

