பூஜித ஜயசுந்தருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏற்க முடியாது – அலி சப்ரி.!!!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைத் தீர்ப்பை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அவற்றைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகக் கூறி, குற்றவியல் கடமைத் தவறல், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி என சிறப்பு மூவர் அடங்கிய நிலையான மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அலி சப்ரி, குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தது உண்மை என்றும், அவற்றைத் தடுக்க பொலிஸாரும் தேசிய பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை என்றும் குறிப்பிட்டார்.
எனினும், குற்றவியல் நோக்கம் நிரூபிக்கப்படாத சூழலில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.