சட்டவிரோத மாடு கடத்தல் முறியடிப்பு: இருவர் கைது – மாடு மற்றும் பட்டா வாகனமும் பொலிஸ் வசம்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
கற்பிட்டியிலிருந்து நுரைச்சோலை நோக்கி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாடு ஒன்றை ஏற்றிச் சென்ற இரு நபர்கள், மாடு மற்றும் பட்டா வாகனத்துடன் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) ஏத்தாளை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு குர்பான் கடமைக்காக மாடுகள் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்படுவதாக கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கற்பிட்டி பொலிஸ் நிலைய கடமைப் பொறுப்பதிகாரி கபில பிரேமதாச தலைமையிலான விசேட குழுவினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே குறித்த பட்டா வாகனம் ஏத்தாளை பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி மாடு ஏற்றிச் சென்ற இரு நபர்களும் கைது செய்யப்பட்டதுடன், மாடு மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மாடு மற்றும் வாகனம் என்பன நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கற்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்பாடுகளை முற்றாக ஒழிக்கும் நோக்கில் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


