இலங்கையின் சுகாதாரத் துறைக்கு இந்தியாவின் ரூ.600 மில்லியன் உதவி; புதிய தெனியாய வைத்தியசாலைக்கு நவீன உபகரணங்கள்.!!!
புதிய தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு ரூ.600 மில்லியன் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையில் இன்று (13) கைச்சாத்திடப்பட்டது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
திட்வா புயலுக்குப் பின்னர் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் அபாயங்களை கருத்தில் கொண்டு, தற்போதைய தெனியாய ஆதார வைத்தியசாலையை பாதுகாப்பான புதிய இடத்திற்கு மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு ரூ.600 மில்லியன் மதிப்பிலான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த உதவியின் மூலம் புதிய வைத்தியசாலையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டு, நோயறிதல், சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ சேவைகளின் தரம் மேம்படுத்தப்படுவதுடன், மாத்தறை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு மேலும் தரமான சுகாதார சேவைகள் வழங்கப்படவுள்ளன.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த ஒப்பந்தம் இலங்கை – இந்தியா இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக அமைவதாக தெரிவித்தார். மேலும், இந்த நிதியுதவிக்காக இந்திய அரசுக்கும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கும் இலங்கை மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.
இயற்கை பேரிடர் அபாயம் காரணமாக தற்போதைய வைத்தியசாலை பாதுகாப்பற்ற பகுதியில் அமைந்துள்ளதால், தெனியாய நகரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹேண்ட்ஃபோர்டு எஸ்டேட் பகுதியில் 300 படுக்கைகள் கொண்ட நவீன வைத்தியசாலையை ரூ.6 பில்லியன் செலவில் இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஆண், பெண், குழந்தைகள் மற்றும் மகப்பேறு வார்டுகள், அறுவை சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் அமைக்கப்படவுள்ளன.
கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டுக்குள் ஆரம்பமாகும் என்றும், மூன்று ஆண்டுகளுக்குள் புதிய வைத்தியசாலை முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




