மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இரு பிரபல கசிப்பு உற்பத்தியாளர்கள் கைது.!!!
(ஜே.கே)
மட்டக்களப்புமாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் செயல்பட்டு வந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது பிரபல கசிப்பு உற்பத்தியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த இடத்திலிருந்து 10 பரல்களில் 70 லீட்டர் கசிப்பு மற்றும் சுமார் 1,417 லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாவிக்கரையில் சூட்சுமமான முறையில் நீண்ட நாட்களாக நடத்தப்பட்டு வந்த இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கசிப்பினை விநியோகித்து வந்த இரண்டு பிரபல கசிப்பு வர்த்தகர்களே இச்சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் தொடர்புடைய பொருட்களுடன் சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.




