பெருந்தொகை போதைப்பொருட்கள்: நீதிமன்ற உத்தரவின்படி தகனம்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பல்வேறு சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட பெருமளவான போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி இன்று (27) அழிக்கப்பட்டன.
இந்நிகழ்வு புத்தளம் வணாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள ‘லெக்டோவத்தை’ (Lactowatta) எரியூட்டும் உலையில் இடம்பெற்றது.
பலபிட்டி மற்றும் சிலாபம் நீதிவான் நீதிமன்றங்களில் விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய பெருமளவான போதைப்பொருள் தொகையே இவ்வாறு தகனம் செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில் ஹெரோயின் 22 கிலோ 888 கிராம், கேரளா கஞ்சா 33 கிலோ 172 கிராம் மற்றும் கஞ்சா 247 கிலோ 940 கிராம் ஆகிய போதைப்பொருட்கள் எரியூட்டும் உலையில் வைத்து அழிக்கப்பட்டன.
திங்கட்கிழமை அதிகாலை 05.00 மணியளவில் பலபிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்தும், காலை 07.30 மணியளவில் சிலாபம் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போதைப்பொருள் பொதிகள் எரியூட்டும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் சந்தன ஹேரத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகளும் இவ்வழிப்பு நடவடிக்கையின் போது பிரசன்னமாகியிருந்தனர்.



