மலேசியாவில் உலக சாம்பியன் பட்டம் வென்ற: மதவாச்சி மாணவி சும்ரி பாத்திமா சுதா கௌரவிப்பு.!!!
மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் கணிதப் போட்டியில் (ABACUS L1B) 13 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,500 போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்த மதவாச்சி மாணவி செல்வி சும்ரி பாத்திமா சுதா உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
மதவாச்சி அல்-மதீனா உயர்தரப் பாடசாலையின் 7ஆம் தர மாணவியான அவர், சர்வதேச அபாகஸ் போட்டிக்குத் தெரிவாகி பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், மாணவியின் அபார வெற்றியைப் பாராட்டி நேற்று (11) மதவாச்சி அல்-மதீனா உயர்தரப் பாடசாலையில் விசேட கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு மாணவியை வாழ்த்தி கௌரவித்தனர்.
மாணவி சும்ரி பாத்திமா சுதாவின் இந்த சாதனை, இலங்கையின் கல்வித் துறைக்கும் இளம் தலைமுறைக்கும் பெருமை சேர்க்கும் வெற்றியாகக் கருதப்படுவதுடன், எதிர்கால மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.












