திருமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பாரிய பஸ் விபத்து: 23 பேர் காயம் – உயிரிழப்பு இல்லை.!!!
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கை பகுதியில் இன்று (22) புதன்கிழமை பாரிய பஸ் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையிலிருந்து மூதூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பஸ், திருமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நேரத்தில் பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேர் காயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்தினால் திருமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பின்னர் நிலைமை சீரானதாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




