இலங்கையில் பெரும் இணையவழி மோசடி வலையமைப்பு முறியடிப்பு – 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது.!!!
கொழும்பு புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, இணையவழி மோசடி செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கைகள் தலங்கம மற்றும் ராஜகிரியா உள்ளிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தலங்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராஜகிரியா பகுதியில் சுமார் 120 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் பிடியாணையில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் பல கணினிகள், கைபேசிகள் மற்றும் பிற மின்னணு உபகரணங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகஸ்கார், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இணையவழி மோசடி வலையமைப்புடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

