பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்; மாகாண மட்டத்திலும் மாற்றம்.!!!
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய புத்திக சிறிவர்தன, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்குப் பொறுப்பாக கடமையாற்றுவதுடன், பயிற்சி மற்றும் உயர் பயிற்சிப் பிரிவின் பதில் கடமைகளையும் மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சிறப்புப் பிரிவில் கடமையாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய கித்சிறி ஜயலத், சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிறப்புப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி. கருணாரத்ன, அப்பதவியில் இருந்து வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மேலும் 6 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா, பொலிஸ் களப் படைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீதமுள்ள அதிகாரிகளுக்கான இடமாற்ற விவரங்களும் பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.