ஆரையம்பதிக்கு கசிப்பு கடத்த முயன்றவர் கைது; 150 லீற்றர் கசிப்பு பறிமுதல்.!!!
கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்திற்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடித் தோணியில் கசிப்பு கடத்திச் சென்ற ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் கொக்கட்டிச்சோலை பொலிஸார் நேற்று (10) அதிகாலை கைது செய்துள்ளனர்.
விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வேனுஜன் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து அதிகாலை 4.00 மணியளவில் காஞ்சிரம்குடா வாவிப் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, மீன்பிடித் தோணியில் கலன்களில் எடுத்துச் செல்லப்பட்டு வந்த 150 லீற்றர் கசிப்பை கைப்பற்றியதுடன், ஆரையம்பதியைச் சேர்ந்த 60 வயதுடைய சந்தேகநபரையும் கைது செய்தனர்.
மேலும், கசிப்பு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடித் தோணியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.