சட்டவிரோத கசிப்புடன் கைது செய்யப்பட்ட நபர்: பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு.!!!
சட்டவிரோத கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா சாந்தகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கரடியனாறு பொலிஸாரால் நேற்று (22.) இரவு சுமார் 8.00 மணியளவில், 1500 மில்லிலீற்றர் சட்டவிரோத கசிப்புடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சிறைக்கூடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நீதிமன்ற உத்தரவு பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.